Published : 23 Mar 2018 08:25 AM
Last Updated : 23 Mar 2018 08:25 AM
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில்லை என கர்நாடக அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை மாநில நீர்வளத்துறை நேற்று கூட்டியது. பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மத்திய அமைச்சர் அனந்தகுமார், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட காங்கிரஸ், பாஜக, மஜத எம்பிக்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சி எம்பிக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சட்ட நிபுணர்களின் அறிவுரையின் பேரில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில்லை என கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
கேரளா சீராய்வு மனு தாக்கல்
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி கேரள அரசு சீராய்வு மனுவை நேற்று தாக்கல் செய்தது. முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு பொருந்தும். எனவே, இதில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT