Last Updated : 06 May, 2019 12:00 AM

 

Published : 06 May 2019 12:00 AM
Last Updated : 06 May 2019 12:00 AM

நாடு முழுவதும் மாற்றத்துக்கான அலை வீசுகிறது: காங். மூத்த தலைவர் சச்சின் பைலட் கருத்து

நாடு முழுவதும் மாற்றத்துக்கான அலை வீசுவதாக ராஜஸ்தான் துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு தலைமை வகித்த சச்சின் பைலட், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014 மக்களவைத் தேர்தலைப்போல இந்தத் தேர்தலில் ‘மோடி காரணி’ எடுபடாது. கடந்த 5 ஆண்டு கால அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, நாடு முழுவதும் மாற்றத்துக்கான அலை வீசுகிறது. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு அமோக ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, கும்பல் வன்முறை, பசு குண்டர்கள் தாக்குதல்ஆகிய சம்பவங்கள் நிகழவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு சக்தி வாய்ந்தவர்களின் ஆதரவு இருப்பதுதான் இதற்குக் காரணம்.

வாழ்வாதாரம், வேலைஉள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப பாஜக முயன்று வருகிறது. குறிப்பாக, மதம், கோயில் - மசூதி (மந்திர்-மஸ்ஜித்) முஸ்லிம் – இந்து (அலி-பஜ்ரங்பலி), தேசியவாதம் என்றெல்லாம் பாஜகவினர்பிரச்சாரத்தின்போது பேசுகின்றனர். இவையெல்லாம் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில், நாட்டின்பொருளாதார வளர்ச்சி மற்றும்ஆளும் கட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகிய பிரச்சினைகளின் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் புதிதாக ஒருவர் பிரதமராவார். தேர்தல் முடிவு வெளியான பிறகு புதிய அரசுக்கு யார் தலைமை ஏற்பார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x