Published : 31 May 2019 06:21 PM
Last Updated : 31 May 2019 06:21 PM

தேசத்தைக் காப்பவர்களுக்காக முதல் கையெழுத்து: வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

தேசத்தைக் காப்பவர்களுக்காக அரசின் முதல் கையெழுத்து அர்ப்பணிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது.

 

இதையடுத்து குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் மோடிக்கு குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார். இவருடன் 57 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

 

இதற்கிடையே கேபினட் அமைச்சர்களின் கூட்டம் இன்று கூடியது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதனுடன் வெளியாகியுள்ள பதிவில், இந்த அரசாங்கத்தின் முதல் முடிவு இந்தியாவைப் பாதுகாப்பவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. நக்சல் அல்லது தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பெரியளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக தேசியப் பாதுகாப்பு நிதியத்தின் கீழ் உயிரிழந்த வீரர்களின் ஆண் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 வழங்கப்பட்டது. இத்தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீரர்களின் பெண் குழந்தைகளுக்கு மாதாமாதம் வழங்கப்பட்ட ரூ.2,250, தற்போது ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x