Published : 23 May 2019 07:28 PM
Last Updated : 23 May 2019 07:28 PM

எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு குமாரசாமி திடீர் அழைப்பு: கர்நாடக அரசியலில் பரபரப்பு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி வெளியாகின.

இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறும்போது, ‘‘கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரை தான் பதவியில் இருப்பார். இன்று இரவு அவரால் தூங்க முடியாது. எனவே வெள்ளிக்கிழமை காலையில் அவர் பதவியில் இருந்து இறங்கி விடுவார்’’ என தெரிவித்தார்.

இந்த சூழலில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் தனியாகவே தற்போது 300 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணியுடன் சேர்ந்து 345 இடங்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றுள்ளது.

அதேசமயம் காங்கிரஸை பொறுத்தவரையில் தனியாக 51 இடங்களிலும் கூட்டணியுடன் 90 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது

கர்நாடகாவிலும் ஆளும் கூட்டணியான காங்கிரஸ் - மதச்சார்பற்ற பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 24 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 2 இடங்களில் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

இந்த சூழலில் திடீரென மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட்டத்தை குமாரசாமி நாளை கூட்டியுள்ளார். அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். குமாரசாமி அணி மாற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறி வரும் நிலையில் அவர் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளன. இதில் பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸூக்கு 80 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு தற்போது தேர்தல் நடந்துள்ளது. இதில் ஒன்றில் பாஜகவும், மற்றொன்றில் காங்கிரஸூம் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x