Published : 21 May 2019 01:56 PM
Last Updated : 21 May 2019 01:56 PM
அன்பையும் எல்லா உயிர்களையும் மதிக்கவும் கற்றுக்கொடுத்தவர் ராஜீவ் காந்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல், ''என்னுடைய தந்தை மென்மையானவராக, அன்பாக, கனிவாக மற்றும் பிரியமானவராக இருந்தார். அவர்தான் எனக்கு அன்பையும் அனைத்து உயிர்களையும் மதிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர். வெறுப்பு கூடாது என்றும் மன்னிக்கவும் சொல்லிக் கொடுத்தார். அவரை இழப்பை எண்ணி வருந்துகிறேன்.
எனது தந்தையின் நினைவு நாளில், அவரை அன்புடனும் நன்றியுடனும் நினைத்துப் பார்க்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிரியங்கா காந்தி தனது தந்தையுடன் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து ஹீரோ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை
கடந்த 1991-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதியால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT