Published : 16 May 2019 02:14 PM
Last Updated : 16 May 2019 02:14 PM

ஈஸ்வர் சந்திர வித்யாசாகருக்கு பிரம்மாண்ட சிலை: பிரதமர் மோடி உறுதி

வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதே இடத்தில் பிரம்மாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டியும், ‘அமித் ஷா திரும்பிப் போ’ என்ற பதாகைகளைக் காட்டியும் கோஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.

இந்தக் கலவரத்துக்கு பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மனுவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது இதுகுறித்துப் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:

''கொல்கத்தாவில் அமித் ஷா கலந்து கொண்ட பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை நாடே பார்த்தது. வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசகர் சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வித்யாசாகரின் கனவை நாங்கள் நனவாக்குவோம். அவரது அறிவார்ந்த சிந்தனையை நாங்கள் மதிக்கிறோம். சிலை உடைக்கப்பட்ட இடத்தில் அவருக்கு ஐம்பொன்னில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x