Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட 2-வது படுதோல்வி இதுவாகும். கடந்த 2014 தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போது 44 இடங்களை மட்டுமே பெற்றது.
தற்போதைய தேர்தலில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, குஜராத், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லட்சத் தீவுகள், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் ஆகியவற்றில் காங்கிரஸ் முழு தோல்வி அடைந்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா கூறும்போது, “17 மாநிலங்களில் பாஜக 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் பூஜ்யம் பெற்றுள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் ராஜ் பப்பர், ஒடிசா மாநிலத் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் முடிவு எடுக்கும் உயர் அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வருவார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT