Last Updated : 20 May, 2019 12:45 PM

 

Published : 20 May 2019 12:45 PM
Last Updated : 20 May 2019 12:45 PM

கருத்து கணிப்பு எல்லாம் பொய்; நான் மே-23 வரை காத்திருப்பேன்: சசி தரூர்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ள நிலையில் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கருத்து கணிப்புகள் எல்லாம் தவறானவை. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் 56 கருத்து கணிப்புகள் பொய்த்துப் போயின. அதனால் நான் மே 23 வரை காத்திருப்பேன்.

இந்த கற்பனை எண்களை வைத்துக் கொண்டு விவாதிப்பதைக் காட்டிலும் 23 வரை காத்திருப்பதே மேல். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கருத்து கணிப்பாளர்களிடம் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் அரசாங்கத்தின் ஆளாக இருக்கலாமோ என்ற அச்சத்திலேயே சொல்ல மாட்டார்கள். எனவேஉண்மையான தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருப்போம் " எனக் கூறியுள்ளார்.

பொய்த்துப் போன ஆஸி கருத்து கணிப்பு:

ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் நீக்கப்பட்டதால் ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த வாரம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. அதில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 52% ஆதரவும், ஆளும் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கு 48% ஆதரவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் கட்சி படுதோல்வி அடையும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அவரது கட்சியோ எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியே சசி தரூர் கருத்து கணிப்பு எல்லாம் பொய் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x