Last Updated : 24 May, 2019 12:00 AM

 

Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

1977 தேர்தலில் பாட்டி இந்திராவைப்போல பேரன் ராகுலுக்கு அமேதியில் கிடைத்த தோல்வி

கடந்த 2014 தேர்தலில் நாடு முழுவதிலும் வீசிய நரேந்திர மோடி அலையையும் மீறி, உ.பி.மாநிலம் அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் வெற்றி பெற்றனர். அப்போது, ராகுலை பாஜக சார்பில் ஸ்மிருதி இராணியும் ஆம் ஆத்மி கட்சியின் குமார் பிஸ்வாஸும் எதிர்த்து போட்டியிட்டனர். இதில் மூன்றாவது இடம் பெற்ற குமார் இந்த தேர்தலில் பின்வாங்கி விட, இரண்டாவதாக வந்த ஸ்மிருதி இராணி மீண்டும் போட்டியிட்டிருந்தார். காங்கிரஸின் குடும்ப தொகுதியாகக் கருதப்படும் அமேதியில் ராகுலின் மறுவெற்றி தடுமாற்றம் கண்டது. இதற்கு அங்கு தோல்விக்கு பிறகும் ஸ்மிருதி தனது பணிகளை தொடர்ந்தது காரணமாக அமைந்தது.

மேலும், உ.பி.யில் 2017-ல் அமைந்த பாஜக ஆட்சியும் ஸ்மிருதி இரானிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. உபி கிழக்குப்பகுதியான அமேதி சுமார் 30 வருடங்களாகக் காங்கிரஸின் வெற்றிக்களமாக இருந்தது.1999-ம் ஆண்டுக்குப் பின் சோனியா காந்தி அந்தத் தொகுதியில் போட்டியிட்டதில் மீண்டும் அமேதியில் காங்கிரஸ் வலுப்பெற்றது.

2004 மக்களவை தேர்தலில் திடீர் என அரசியலில் குதித்த ராகுல், அமேதியில் போட்டியிட்டார். இவரது தாய் சோனியா அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறினார். ராகுலுக்கு கிடைத்த 71 சதவிகித வாக்குகள், அடுத்து வந்த தேர்தல்களில் குறைந்து 2009-ல் 66, 2014-ல் 46 என்றானது. அதேசமயம், ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இராணி 2014-ல் போட்டியிட பாஜகவுக்குஓரிலக்கத்தில் இருந்த வாக்கு சதவிகிதம் 37 என்றானது. இதனால், ராகுலுக்கு அமேதியில் வெற்றி பெறுவது கடினம் என ‘இந்து தமிழ்’ நாளேட்டிலும் 2 முறை செய்திகள் வெளியாயின. தொடர்ந்து அமேதியில் பாஜகவின் கவனம் அதிகரித்து மீண்டும் ஸ்மிருதியை வேட்பாளராக்கியது நல்ல பலனை அளித்துள்ளது.

1971 மக்களவை தேர்தலில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை எதிர்த்து ராஜ்நாராயண், பிரஜா சோசலிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார். ஆனால், தனக்கு ஏற்பட்ட தோல்வியை ஏற்காமல் உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். இதில் இந்திராவின் வெற்றி செல்லாது எனத் தீர்ப்பானது. அதன் பிறகு பிரகடனமான அவசர சட்டத்திற்கு இந்த தீர்ப்பும் காரணமானது. இதையடுத்து 1977-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீண்டும் இந்திராவை எதிர்த்த ராஜ்நாராயணுக்கு சுமார் 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது. இங்கு இந்திராவின் தோல்விக்கு பின் காந்தி குடும்பத்தில் அவரது பேரனனான ராகுலுக்கு தோல்வி கிடைத்துள்ளது.

1977 தேர்தலில் ஜனதா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியால் இந்திராவுடன் பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் தோல்வி கண்டனர். அதேபோல் இந்தத் தேர்தலிலும் ராகுலுடன் சேர்த்து உ.பி.யில் பல காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுக்கும் தோல்வி கிடைத்துள்ளது. இதில், லக்னோவில் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணா, ராஜ் பப்பர், ஜிதின் பிரசாத் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x