Published : 17 May 2019 04:29 PM
Last Updated : 17 May 2019 04:29 PM
வீட்டுத் தகராறில் நடந்த சண்டையைப் பொறுக்கமுடியாமல் அனைவரையும் வெட்டிவிட்டு குடும்பத் தலைவர் ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் மபியில் நேற்று நடந்துள்ளது. இதில் அவரது மனைவியும் பெற்றோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து பரேலி காவல்நிலைய ஆய்வாளர் கே.எஸ் முகாதி தெரிவித்ததாவது:
ஜிதேந்திரா புர்வாமா (30), இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் பலத்த விவாதம் நடந்துகொண்டிருந்தது. வழக்கமாக வீடுகளில் நடக்கும் இப்பிரச்சினைகள் சூடாவதைப்போலவே, ஜிதேந்திராவின் மனைவிக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் வளர்ந்துள்ளது.
இதனால் கடும் கோபம் அடைந்த ஜிதேந்திராவும் இவ்விவாதத்தில் கலந்துகொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நகர்ந்தவர் ஒரு கோடரியோடு வந்து பெற்றோர்கள், தனது மனைவி எனவும் பாராமல் அவர்கள் அனைவரையும் வெட்டி சாய்த்துள்ளார். இதில் அவரது மகனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜிதேந்திராவின் தந்தை ஜலாம் (60), தாய் சாரதா (55) மற்றும் அவரது மனைவி சுனிதா 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இப்பிரச்சினையில் தலையிட்ட சொந்த மகனையும் ஜிதேந்திரா கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தற்போது போபால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரை வெட்டிக்கொன்ற ஜிதேந்திரா தப்பியோடிவிட்டார். அவரை தேடிப்பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்ஆய்வாளர் முகாதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT