Last Updated : 16 May, 2019 12:23 PM

 

Published : 16 May 2019 12:23 PM
Last Updated : 16 May 2019 12:23 PM

பள்ளி புத்தகப் பைகளின் சுமையைக் கட்டுப்படுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றும் அசாம் அரசு

குழந்தைகளின் எடை கூடிய பள்ளி புத்தகப் பைகளின் சுமையைக் கட்டுப்படுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுகிறது அசாம் மாநில அரசு. இதன்படி மே 30-க்குள் முறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த வருடம் காலக்கெடு விதித்துள்ளது.

இது குறித்து பாஜக ஆளும் அசாமின் கல்வி அமைச்சர் சித்தார்தா பட்டாச்சாரியா செய்தியாளர்களிடம் கூறும்போது,  ''சென்னை உயர் நீதிமன்றத்தில் புத்தகச் சுமைகள் மீதான வழக்கில் இடப்பட்ட உத்தரவை நம் மாநிலம் பின்பற்ற வேண்டும்.  இதன்படி மே 30-க்குள் முறைப்படுத்தாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பள்ளிகளில் திடீர் சோதனைகளும் நடத்தப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை கடந்த ஆண்டு முதல் அசாம் அரசு அமலாக்கி இருந்தது. இதை பல பள்ளிகள் சரியாகப் பின்பற்றவில்லை எனத் தற்போது புகார் எழுந்துள்ளது.  இதனால், கடந்த ஆண்டு புத்தகச் சுமை மீது இடப்பட்ட உத்தரவு நிரந்தரமாகத் தொடரும் எனவும் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் எடை கூடிய பள்ளி புத்தகப் பைகள் பயன்படுத்த வேண்டியதாயிற்று.

இந்தப் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதன் தீர்ப்பில் வெளியான உத்தரவில் பள்ளி புத்தகப் பைகளின் எடை நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, 1 முதல் 2 வரையிலான வகுப்புக் குழந்தைகளுக்கு ஒன்றரை கிலோ எடை வரையிலான புத்தகப் பைகளின் சுமை நிர்ணயிக்கப்பட்டது. 3 முதல் 5 வகுப்புகள் வரை 2 முதல் 3 கிலோவும், 6,7 வகுப்புகளுக்கு 4 கிலோவும் நிர்ணயிக்கப்பட்டன.  8,9 வகுப்புகளுக்கு நான்கரை கிலோவும், பத்தாம் வகுப்பிற்கு ஐந்து கிலோ என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், வீட்டுப்பாடங்கள் மீதும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதையும் அசாம் அரசு தீவிரமாகப் பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x