Published : 30 Apr 2014 08:20 PM
Last Updated : 30 Apr 2014 08:20 PM

பெண் நிருபர் விவகாரம்: திக்விஜய் சிங் விளக்கம்

பெண் நிருபர் உடனான விவகாரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களும், அதையொட்டிய சர்ச்சைகளும் தீவிரமாக பரவிய நிலையில், அது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான 63 வயது திக்விஜய் சிங்கும், ராஜ்யசபா டிவியின் செய்தி வாசிப்பாளர் அம்ரிதா ராயும் உள்ள சர்ச்சைக்குரிய 'செல்ஃபீ' படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவ ஆரம்பித்தன.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து, ட்விட்டரில் திக்விஜய் சிங் வெளியிட்ட செய்தியில், ""எனக்கும் அம்ரிதா ராய்க்குமான உறவை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அவரும், அவரது கணவரும் ஏற்கனவே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவரது விவாகரத்திற்குப் பின் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம். ஆனால், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படியான தலையீட்டை ஆட்சேபிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திக் விஜய் சிங்கின் மனைவி ஆஷா சென்ற வருடம் காலமானார். இவர்களுக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திக்விஜய் சிங் உடனான உறவு பற்றி அம்ரிதா ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், "நான், எனது கணவரைப் பிரிந்துவிட்டேன். நாங்கள் பரஸ்பர ஒப்புதலோடு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். விவாகரத்துக்குப் பின் திக்விஜய் சிங்கை மணந்துகொள்ள முடிவு செய்துள்ளேன்.

எனது மின்னஞ்சல் கணக்கு மற்றும் கணிணி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதிலிருக்கும் பல தகவல்கள், படங்கள் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மிகப்பெரிய குற்றம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என் அனுமதியின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அம்ரிதா கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுபற்றி தனக்கு எவுதும் தெரியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதேவேளையில், காங்கிரஸ் தலைமை தனது கட்சியில் நடக்கும் ஒழுங்கீனங்களைப் பற்றி கவனம் செலுத்துமாறும், அந்தக் கட்சித் தலைவர்களின் கண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் பாஜக கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x