Last Updated : 02 Apr, 2019 02:23 PM

 

Published : 02 Apr 2019 02:23 PM
Last Updated : 02 Apr 2019 02:23 PM

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு ரத்து; 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு, மத்திய அரசு நிறுவனங்கள், நீதிமன்றம், நாடாளுமன்றப் பணிகளில் 2019, ஏப்ரல் 1-ம் தேதி வரை 4 லட்சம் பணியிடங்கள் காலியாகும். அவை அனைத்தும் 2020 மார்ச் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது:

''நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்பை ஒரு ஆண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். ப.சிதம்பரம், கவுடா ஆகியோரிடம் இரு விஷயங்களை தெளிவாகக் கூறிவிட்டேன்.

மக்களின் கருத்துகள் தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் ஒரு பொய் கூட இருக்கக் கூடாது. ஏனென்றால், பிரதமர் பேசும் பொய்யை நாள்தோறும் கேட்கிறோம் என்பதால் சாத்தியமான திட்டங்களை ஆய்வு செய்யுமாறு கூறினேன்.

இத்தேர்தல் அறிக்கையில்  பல முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளோம்.

1 முதலாவதாக, 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதியுதவி அளிப்பது. இந்தத் திட்டமே பிரதமர் மோடியின் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் எனும் பொய்யான வாக்குறுதியில் இருந்துதான் எனக்கு வந்தது.

2 அரசுத் துறைகளில் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவை உடனடியாக நிரப்பப்படும், கிராம சபைகளில 10 லட்சம் பணிகள் உருவாக்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வரிச்சலுகையோடு தொழில்தொடங்க அனுமதிக்கப்படும்.

3. மூன்றாவதாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

4. விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் உருவாக்கப்படும். ரயில்வே பட்ஜெட் போன்று தனியாக விவசாயிகளுக்கு பட்ஜெட் கொண்டுவரப்படும்.

5. விவசாயிகள் பயிர்க்கடனைச் செலுத்தாவிட்டால், அது கிரிமினல் குற்றத்தில் இருந்து நீக்கப்படும்.

7 . கல்விக்காக நாட்டின் ஜிடிபியில் இருந்து 6 சதவீதம் ஒதுக்கப்படும். நாட்டின் கல்வி நிலையங்கள், சுகாதார நிறுவனங்கள் வலிமைப்படுத்தப்படும்.

8. தற்போதுள்ள ஜிஎஸ்டி முறை மறு ஆய்வு செய்யப்பட்டு ஜிஎஸ்டி 2.0 முறை கொண்டுவரப்படும். இந்த ஜிஎஸ்டி வரி எளிமையாகவும், மக்கள், வர்த்தகர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஒரே வரியாக இருக்கும். மக்கள் அதிகமாக நுகரும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்.

9. மருத்துவப் பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வலுக்கிறது. அந்த நீட் தேர்வு ரத்து செய்ப்படும். நீட் தேர்வுக்கு இணையான தரத்துடன் மாநிலங்கள் தேர்வுகளை நடத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும்.

10. மத்திய அரசு, மத்திய அரசு நிறுவனங்கள், நீதிமன்றம், நாடாளுமன்றப் பணிகளில் 2019, ஏப்ரல் 1-ம் தேதி வரை 4 லட்சம் பணியிடங்கள் காலியாகும். அவை அனைத்தும் 2020 மார்ச் மாதத்துக்குள் நிரப்பப்படும்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x