Published : 26 Apr 2019 11:26 AM
Last Updated : 26 Apr 2019 11:26 AM
பிரதமர் மோடி நாட்டு மக்களை அச்சப்படுத்தி ஆட்சி செய்ய முடியும் என நினைக்கிறார். ஆனால், மக்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ''காங்கிரஸ் ஆட்சியின் போது நாடு பாதுகாப்பாக இல்லை. மோடியின் ஆட்சியில்தான் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது'' என்று பேசியிருந்தார்.
முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா சொல்கிறார். கடந்த 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 போர்களிலும் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்தது யார்?
மோடி, அமித் ஷா வருவதற்குமுன்பு கூட இந்த நாடு பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஏனென்றால், நம்மிடம் திறமையான, கட்டுக்கோப்பான தரைப்படை, விமானப்படை, மற்றும் கப்பற்படை இருந்தது.
தேசத்தில் உள்ள பல்வேறு சமூக மக்களான பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், சிறுபான்மையினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பாதுகாப்பின்றி இருந்தால், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்?
தேசத்தில் உள்ள மக்களை அச்சத்துடன் வைத்தே ஆட்சி செய்துவிட முடியும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால், மக்கள் தேசத்துக்காக மனதில் அச்சமின்றி தேர்தலில் வாக்களிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT