Published : 26 Apr 2019 12:40 PM
Last Updated : 26 Apr 2019 12:40 PM
அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போலோ மருத்துவமனையின் தரவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகக் கூறி அந்நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வின் விசாரணையில், ''விசாரணை ஆணையம் நடத்தி வரும் விசாரணை நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது'' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமர்வின் விசாரணையில் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோரையும் உள்ளடக்கிய அமர்வு இடைக்காலத் தடை குறித்த இவ்வுத்தரவைப் பிறப்பித்தது.
டிசம்பர் 5, 2016-ல் அப்போலோ மருத்துவமனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளை ஆராய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
மேல்முறையீடு மனு விவரம்
அப்போலோ மருத்துவமனையின் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை குறித்த அவர்கள் தங்கள் வாக்குமூலங்களை அளித்தனர். அதனுடன் 3 ஆயிரம் பக்கத்திற்கும் மேல் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ ஆவணங்களும் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இவ்விவரங்கள் யாவும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளபடுகிறது. இது விசாரணையை மேலும் சிக்கலாக்கவும் அப்போலோ தரப்புக்கு சவாலை ஏற்படுத்துவதாகவும் உள்ளதால் தகுந்த மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தின் குழுவில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT