Published : 14 Apr 2019 12:12 PM
Last Updated : 14 Apr 2019 12:12 PM

ரஃபேல் விவகாரம் குறித்த உச்ச நீதிமன்ற முடிவு  ‘உண்மையான புலனாய்வு இதழியலுக்குக் கிடைத்த உத்வேகம்’: முன்னாள் தலைமை நீதிபதி லோதா

ரஃபேல் விவகாரத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழில் என்.ராம் தொடர்ந்து புலனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். இது தொடர்பான மத்திய அரசின் ஆட்சேபனைகளைத் தள்ளுபடி செய்து அந்த ஆவணங்களைப் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உண்மையான புலனாய்வு இதழியலுக்குக் கிடைத்த உத்வேகம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து லோதா கூறும்போது, “டிசம்பர் 14-ம் தேதியன்று ரஃபேல் விவகாரத்தில் விசாரணைக்குட்படுத்த எதுவும் இல்லை என்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதன் பிறகு அந்தத் தீர்ப்பை சீராய்வு  செய்ய வேண்டும் என்ற வழக்கில் 'தி இந்து' (ஆங்கிலம்) வெளியிட்ட ஆவணங்களை அதன் தகுதி தராதரங்களைக் கணக்கில் கொண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இது பரந்துபட்ட பொதுநலன் கருதி உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவாகப் பார்க்கிறேன்''என்றார்.

“ஏப்ரல் 10-ம் தேதி அளித்த தீர்ப்பு உண்மையான புலனாய்வு இதழியலுக்குக் கிடைத்த உத்வேகமாகும்” என்றார்.

‘கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமை’

முன்னாள் தலைமை நீதிபதி வி.என்.கரே, ரகசியக் காப்பு என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பல முறை கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் 1981-ம் ஆண்டு முதல் பல தீர்ப்புகளைச் சந்தித்துள்ளது. ஆனால் ரஃபேல் விவகாரம் குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்ற முடிவு கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பதாக உள்ளது.  

“புலனாய்வு இதழியல் தேச நலன்கள் கருதி ஆவணங்களை வெளிக்கொண்டு வரலாம் அதே நேரத்தில் தேசப்பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செய்வதில் தவறில்லை” என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி கரே.

இன்னொரு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த ஆவணங்களை கோர்ட் பரிசீலிக்கலாம் என்ற முடிவே புலனாய்வு இதழியலுக்குக் கிடைத்த மதிப்புதான்” என்றார்.

எந்த ஒரு அரசும் தகவலை முடக்குவதன் மூலம்  ‘முற்றாட்சிக் கொள்கை’யைப் பின்பற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் அன்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அயல்நாட்டுடனான உறவாக இருந்தாலும் தேசப்பாதுகாப்பை பாதிக்கும் விஷயங்களாக இருந்தாலும் தகவலறியும் உரிமைச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘விலைமதிப்பற்ற உரிமை’ என்பதை வழங்குகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஆர்டிஐ மனுதாரர் கேட்டவுடனேயே தகவல்களை அளிக்க வேண்டியதில்லை. மனுதாரர், ஒரு தகவலை அளிக்காமல் மறைப்பதால் ஏற்படும் பாதிப்பு தகவல் அளிப்பதனால் ஏற்பட்டு விடாது என்று தன் வாதங்களை வலுவாக முன் வைக்க வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x