Published : 27 Apr 2019 12:00 AM
Last Updated : 27 Apr 2019 12:00 AM

தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இடைக்கால முதல்வருக்கு அதிகாரம் இல்லையா?- தேர்தல் ஆணையம் சந்திரபாபு இடையே பனிப்போர்

ஆந்திர மாநிலத்தில் கடந்த 11ம் தேதி சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை ‘அதிகாரம்’ இல்லாத முதல்வர் சந்திரபாபு நாயுடு என தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்படுகிறது. இதனால் தலைமை செயலாளர் நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சியினரும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அதன் பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும். ஒருவேளை அதற்குள் அந்த மாநிலத்தின் முதல்வர் முன் கூட்டியே தனது அமைச்சரவையை கலைத்து விட்டு, தேர்தலுக்கு ஆயத்தமானால், அப்போது சம்பந்தப்பட்ட முதல்வர் ‘காபந்து’ முதல்வராக செயலாற்றுவார். இதுவே, ஒரு அரசு, தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்வதற்கு முன், ஓரிரு மாதங்களுக்கு முன் தேர்தல் அறிவித்தால், அவர் தேர்தலை சந்தித்து, அதன் முடிவுகள் வெளியாகும் வரை அவர் ‘இடைக்கால’ முதல்வராக பதவியில் இருப்பார்.

அதிகார வரம்பு

 ‘இடைக்கால முதல்வர் என்பவர், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, எந்தவித புதிய அரசாணையையும் பிறப்பிக்க இயலாது. ஆனால், மக்கள் நலன் கருதி, வழக்கம்போல், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்கு வளர்ச்சி பணிகள் குறித்தும், உடனுக்குடன் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள் குறித்தும் கலந்தாலோசித்து அவை நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னர், தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர், புதிய ஆட்சி அமைக்கப்படும். அதுவரை இந்த இடைக்கால நேரத்தில் தொடர்ந்து பணியாற்றுபவரே ‘இடைக்கால முதல்வர்’ ஆவார்.

ஆனால், தற்போது, ஆந்திராவில் இதுவே ஒரு பிரச்சினையாக உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 11ம் தேதி, 175 சட்டப்பேரவைத் தொகுதி, 25 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் தடை

தற்போது, ‘இடைக்கால’ முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வருகிறார். ஆனால், எப்போதும் இல்லாத வகையில், தேர்தல் ஆணையம், அரசு தொடர்பாக சந்திரபாபு நாயுடு எவ்வித ஆலோசனைகளும், நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் அதிகாரியான கோபாலகிருஷ்ணா திவேதி இதற்கான ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளதால், சந்திரபாபு நாயுடு உட்பட தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். ‘நான் அதிகாரம் இல்லாத முதல்வரா’ என நாயுடு தேர்தல் ஆணையத்திற்கு நேற்று 9 பக்க புகார் கடிதத்தை எழுதியுள்ளார். அப்படியென்றால் பிரதமர் கூட அதிகாரம் இல்லாத பிரதமர்தானே என அவர் கேள்வி கேட்டுள்ளார். தேர்தல் முடிந்த பின்னர், பதவியில் இருக்கும் முதல்வர்தானே தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மக்களுக்கு நலத் திட்டங்களை சரிவர கொண்டு செல்லும் நபர். அவருக்கு அதிகாரம் இல்லையென்றால், தேர்தல் ஆணையரா இந்தப் பதவியில் இருந்து மக்கள் நலனில் கவனம் செலுத்துவார் ? என சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரம் இல்லாத முதல்வர்

இது இப்படி இருக்கையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், தலைமை செயலாளரான எல்.வி சுப்ரமணியம், பேசியது தற்போது எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றியது போலாகி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை சந்திரபாபு நாயுடு ‘பவர்’ இல்லாத முதல்வர் என இவர் திட்டவட்டமாக அறிக்கை விட்டார்.

இதையடுத்து, ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பதவியில் உள்ள மாநகர மேயர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி சேர்மேன்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் அங்குள்ள அலுலலகங்களில் தர்ணா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். திருப்பதி நகர வளர்ச்சி கழக தலைவர் நரசிம்ம யாதவ், ஊழியர்களுடன் சேர்ந்து மரத்தின் கீழ் அமர்ந்து கோப்புகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால், பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி அதனை அமல்படுத்தவும் முயற்சித்து வருகிறது. இதனால், ஜூன் மாதம் 9ம் தேதி வரை பதவிக்காலம் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் கடும் பனிப்போர் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x