Published : 10 Apr 2019 12:04 PM
Last Updated : 10 Apr 2019 12:04 PM

முதலில் குற்றவாளி என தீர்ப்பு, பிறகுதான் விசாரணை இதுதான் மோடி அரசு: ப.சிதம்பரம் கடும் தாக்கு

சட்டத்தின் அடிப்படை விஷயங்களை பிரதமர் மோடிக்கு மத்திய சட்டத்துறை செயலாளர் கற்றுத்தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவைக்கு நேற்று  பிரச்சாரத்துக்கு வந்திருந்த பிரமதர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தையும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீனில் இருப்பதை மறைமுகமாக விமர்சித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், " மறுவாக்கு எண்ணிக்கை கோரிய முன்னாள் அமைச்சர் தலைமையில் தயாரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையை படிக்கவே அதிர்ச்சியாக இருந்தது. நான் அதிர்ச்சி அடையவில்லை. சொந்தஇருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்குதான் சிலருக்கு நீதிமன்ற ஜாமீன் இருக்கிறதே" எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் " மோடி அரசில், குற்றவாளி என்று முதலில் தீர்ப்பளித்துவிடுவாரக்ள். பின்னர்தான் விசாரணை  நடத்துவார்கள். மோடி அரசில், ஒருவர் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை ஒருவர் குற்றவாளிதான்.  பிரதமர் மோடிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவரின் நண்பர் அருண் ஜேட்லியிடம் ஆலோசனை நடத்திக்கொள்ளட்டும்.

மத்திய சட்டத்துறை செயலாளர் பிரதமர் மோடிக்கு சட்டத்தின் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி, ஜாமீன் என்பது விதிகளின்படி வழங்கப்படுவது, சிறை என்பது, விதிவிலக்காக வழங்கப்படுவது என்பதை புரிந்து கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x