Published : 15 Apr 2019 04:32 PM
Last Updated : 15 Apr 2019 04:32 PM
மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அடுத்த சில நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் 72 மணிநேரமும், மாயாவதி அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. இந்தtஹ் தடை நாளை காலை 6 மணியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் மீரட் நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, இரு மதங்களுக்கு இடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், மாயாவதி தற்போது முஸ்லிம்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறார் என்று தெரிவித்தார்.
அதேபோல, தியோபந்த் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மாயாவதியும், மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி, குறிப்பிட்ட கட்சியினருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கோரி இருந்தார். இரு தலைவர்களும் பேசிய வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் அளித்து புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இரு தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால், இருவரும் அளித்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால், மாயாவதியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கையில், மாயாவதி, ஆதித்யநாத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நாளை மீண்டும் விசாரணை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT