Last Updated : 28 Apr, 2019 04:24 PM

 

Published : 28 Apr 2019 04:24 PM
Last Updated : 28 Apr 2019 04:24 PM

நாங்கள் என்ன ஞாபகமறதியுள்ள முட்டாள்களா?- பிரதமர் மோடி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

பிரதமர் மோடி தான் சாதி குறித்து பேசியதில்லை என்ற வாதத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், " எங்களை என்ன ஞாபகமறதியுள்ள முட்டாள்கள் என மோடி நினைத்தாரா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, கன்னோஜ் நகரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது  பிரதமர் மோடி பேசுகையில், " பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி என்னுடைய சாதிச் சான்றிதழை பிரதி எடுத்து வழங்கி வருகிறார். நான் இந்த நேரத்தில் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் குஜராத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தவன்.

மாயாவதி என்னுடைய சாதி சான்றிதழை வெளியிடாத வரைக்கும்  நான் என்னுடைய சாதி குறித்து கவலைப்படவில்லை. இப்போது அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் கட்சியும் கூட என்னுடைய சாதியை பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இதுவரை சாதி அ ரசியல் செய்தது இல்லை. நான் அவர்களிடம் கேட்பதெல்லாம், தயவு செய்து என்னை சாதி அரசியலுக்கு இழுக்காதீர்கள் " என்று  பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டள்ளார். அவர் கூறுகையில், " கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் சாதியைப் பற்றி பிரச்சாரம் செய்து பிரதமராக வந்த முதல்நபர் நரேந்திர மோடிதான். நான் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் என்று பேசினார். இப்போது தனக்கு சாதியில்லை என்று பேசுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டிலும் அதன்பின்பும், தேநீர் விற்பவரை பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று தொடர்ச்சியாக மோடி பேசிவந்தார். ஆனால், இப்போது ஒருபோதும் தேநீர் விற்பவர் என்ற தனது பூர்வீகத்தை குறிப்பிடவில்லை என்றுபேசுகிறார்.

எங்களை பிரதமர் மோடி என்னவாக நினைத்துவிட்டார். ஞாபகமறதியுள்ள முட்டாள்கள் என நினைத்துவிட்டாரா" எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x