Published : 13 Apr 2019 05:53 PM
Last Updated : 13 Apr 2019 05:53 PM
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் என்பது தேவையில்லாத ஒரு தவறான கருத்தியல். இருநாடுகளும் சேர்ந்து பணியாற்ற எவ்வளவோ நல்லகாரியங்கள் உள்ளன அதில் கவனம் செலுத்தலாம் என்று ஹவாய் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி வில்ஸன் அறிவுரை கூறியுள்ளார்.
ஹவாய் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி வில்ஸன் இன்று இந்தியா வந்திருந்தார். ஹரியானாவில் பிடிஐக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவும் பாகிஸ்தானும் மிகச்சிறந்த சமூகங்களைப் பெற்றிருக்கின்றன. இவ்விரு நாட்டு சமூகங்களையும் பாதுகாக்க வேண்டுமெனில் ராணுவ மோதலை கைவிட வேண்டும்.
ராணுவ மோதல் என்பது தேவையற்ற ஒரு கருத்தாகவே இருப்பதையே நான் பார்க்கிறேன். அது மட்டுமின்றி தீவிரவாதத்தை நான் நிச்சயம் ஆதரிக்க மாட்டேன். மக்களை பாதுகாப்பதே அரசின் முக்கியமான கடமையே தவிர, அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்களை காயப்படுத்துவது அல்ல.
இந்தியாவும் பாகிஸ்தானும் சிறந்த தலைவர்களைக் கொண்டுள்ளன. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளைக் கொடுங்கள். இருநாட்டிற்கும் இடையேயான அரசியல்
பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல; குறைந்தபட்சம் இருநாட்டு மக்களுக்கு இடையேயும் ஒரு நல்ல கலாச்சார உறவை அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை தோல்வியடைந்த நாடுகள் அல்ல. இம் மூன்று அண்டை நாடுகளிலும் அளப்பரிய திறமைகள் குவிந்துள்ளன. அவர்கள் கூட்டாக இணைந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க இணைந்து செயல்படவேண்டும். இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நல்லவிதமாக அணுகுகின்றன.
இவ்வாறு ஹவாய் நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி மைக்கல் டி வில்ஸன் தெரிவித்தார்.
முன்னதாக அவர் ஹரியானாவில் உள்ள ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சட்டம் குறித்து பேசினார்.
''சுற்றுச்சூழல் நீதியும் சட்ட விதிகளும்: நீதித்துறையும் நீதிபதிகள் பங்கும்'' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
மைக்கேல் டி வில்ஸன், சுற்றுச்சூழல் சார்ந்த சட்ட சிக்கல்களை தீர்த்துவைப்பதில் சிறப்புவாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT