Published : 08 Mar 2019 11:38 AM
Last Updated : 08 Mar 2019 11:38 AM
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் 26-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் மத்தியஸ்ர்கள் மூலம் தீர்வு காண நீதிமன்றம் விரும்புவதாகவும் இதுதொடர்பான உத்தரவை மார்ச் 6-ம் தேதி பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மார்ச் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சினைக்கு தீ்ர்வு காண எதிர்ப்பு தெரிவித்தார். உத்தர பிரதேச அரசின் தரப்பிலும் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் முடிவு இந்த வழக்குக்கு பொருத்தமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.
அதுபோலவே வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தம் என்பதால் இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து மத்தியஸ்தர்களை சம்பந்தப்பட்ட தரப்பினரே பரிந்துரை செய்யலாம் என கூறிய நீதிபதிகள், இதற்கான உத்தரவு பிறப்பிப்பதை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் வழக்கில் மத்தியஸ்தர்கள் நியமனம் செய்வது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுவர். மத்தியஸ்தர்கள் நடவடிக்கை அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பான எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது.
மத்தியஸ்த நடவடிக்கையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் குழுவினர் உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ள வேண்டும். 4 வாரங்களுக்குள் தங்கள் அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். மத்தியஸ்த நடவடிக்கையை 8 வாரங்களுக்குள் மொத்தமாக முடித்துக் கொள்ள வேண்டும்.
பைஸாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உத்தர பிரதேச அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு கூடுதல் உறுப்பினர்கள் தேவை என்றால் அதனை அந்த குழுவினரே நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT