Published : 05 Mar 2019 05:33 PM
Last Updated : 05 Mar 2019 05:33 PM

‘‘நாட்டைவிட சொந்த நலன் தான் முக்கியமா? - காங்கிரஸ் மீது ஆம் ஆத்மி கடும் சாடல்

டெல்லியில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவெடுத்துள்ளதன் மூலம் பாஜகவுக்கு உதவி செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் ஆத்மி அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்கு டெல்லி தொகுதிக்கு மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வேடபாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை அறிவித்து விட்டபோதிலும் கூட்டணி கதவை ஆம் ஆத்மி மூடவில்லை.

காங்கிரஸூடன் ஆம் ஆத்மி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என காங்கிரஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘மோடி மற்றும் அமித் ஷா இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என்று தேசமே விரும்புகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிரான வாக்கை பிரிக்க காங்கிரஸ் உதவி செய்கிறது. பாஜக - காங்கிரஸ் இடையே ரகசியமான ஒப்பந்தம் இருப்பதாக வதந்திகள் உள்ளன. காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீழ்த்த டெல்லி தயார். அந்த கூட்டணியை டெல்லி மக்கள் தோற்கடிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதுபோலவே ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘காங்கிரஸூக்கு நாட்டின் நலனை விடவும் சொந்த கட்சியின் நலனே முக்கியம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அக்கட்சியுடன் இணைந்து செயல்பட தயாராக இருந்தோம். ஆனால் அக்கட்சி பாஜகவுக்கு உதவி  செய்யவே முயலுகிறது. டெல்லியில் பாஜக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவோம்’’ எனக் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x