Published : 18 Mar 2019 09:05 PM
Last Updated : 18 Mar 2019 09:05 PM
கோவா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது கோவா மாநில சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
கோவாவில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இன்று மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனால் கோவா அரசியலில் கடந்த 2 நாட்களாக குழப்பம் பெரும் அளவில் அதிகரித்திருந்தது.
கோவா முன்னணிக் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், மகாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ. சுதின் தவாலிகர் ஆகியோர் துணை முதல்வர்களாக இருப்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையின்படி இரண்டு சிறிய கூட்டணிக் கட்சிகளின் இரு எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கை மீதான ஒப்புதலுக்கு இழுபறி இருந்து வந்துள்ள நிலையில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
திங்களன்று நிதின் கட்கரி கூறுகையில் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படும் நபர் குறித்து சிறிய கூட்டணி கட்சிகளுடன் இழுபறி நிலை நீடிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இப்போது சாவந்த் முதல்வராக கூட்டணி கட்சிகளின் ஒப்புதல் கிடைத்தது போல் தெரிகிறது.
40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாஜகவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா முன்னணியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
காங்கிரசுக்கு 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 4 இடங்கள் 2 உறுப்பினகள் மறைவாலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் ராஜினாமா செய்ததாலும் காலியாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT