Published : 13 Mar 2019 10:35 AM
Last Updated : 13 Mar 2019 10:35 AM
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன. இதனால், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் கர்நாடகாவின் மாண்டியா பகுதி ஜோதிடர்கள் கவலையடைந்துள்ளனர்.
மாண்டியாவின் சாமுண்டீஸ்வரி நகரில் இருக்கிறது யோகேஷ் சாஸ்திரியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறிய வீடு. யோகேஷ் கைரேகை ஜோதிடம் கணித்துக் கூறும் தொழில் செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதாகக் கூறி அவருடைய ஜோதிடக் கூடத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த 'கை' அடையாளத்தை அதிகாரிகள் பேப்பர் ஒட்டி மறைத்துள்ளனர். அந்த விளம்பர பதாகையில் இருந்த கை காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை மக்களுக்கு நினைவூட்டுவதுபோல் இருப்பதாகக் கூறி அவர்கள் அந்த பதாகையை மறைத்துள்ளனர்.
இதேபோல் மாண்டியாவின் அசோக் நகர் பகுதியில் பல்வேறு கைரேகை ஜோசியம் சொல்லும் இடங்களில் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கை கர்நாடகா மாநிலத்திலேயே மாண்டியா நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே நடந்திருப்பது வருத்தமளிப்பதாக அந்த ஊரில் உள்ள ஜோதிடர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கே.ஆர்.பேட் என்ற ஜோதிடர் கூறும்போது, "எங்களைத் தேடிவரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் வந்துவிடுவார்கள். ஆனால், எங்கள் கடையின் விளம்பரப் பலகையை இப்படி மூடிவைத்திருந்தால், புதிய வாடிக்கையாளர்கள் எப்படி வருவார்கள்" என்றார்.
இத்தகைய கெடுபிடி குறித்து வினவியபோது மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், "கை சின்னம் மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியின் சின்னத்தை ஒத்துப்போகும் பதாகைகள் மறைக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT