Published : 15 Mar 2019 02:49 PM
Last Updated : 15 Mar 2019 02:49 PM
மத்திய அரசின் சாதனை விளம்பரங்களை அகற்றுவதில் மோடியின் அரசு தலையிடுவதன்மூலம் நடத்தை நெறிமுறைகளை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
17வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து சாலைகளில் உள்ள கட்சிவிளம்பர பேனர்கள், கட்சித் தலைவர் படங்கள் உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாஜக அரசு இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிஸ் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:
பிரதம மந்திரியின் படம் கொண்ட விளம்பரங்களும் அரசு சாதனை விளம்பரப் பலகைகளில் பொதுஇடங்களில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் இவை அகற்றப்பட வேண்டும். ஆனால் மோடியின் சாதனை விளம்பர ஹோர்டிங்குகளை எடுக்க பாஜக ஒத்துழைக்க மறுத்துவருகிறது. இதனால் பாஜக விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலின் அட்டவணையை அறிவித்த போதிலும் பொது இடங்களில், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் மோடி அரசின் சாதனைவிளக்கப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சிகளின் பிரச்சார நோக்கங்களுக்காக அரசு இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுப்பணத்தைத் தவறாக கையாளுவதற்கான சான்றாக மட்டும் இது இல்லை; தேர்தல் நெறிமுறை நடத்தை விதிமீறலாகவும் இருப்பதை இந்த ஹோர்டிங்குகளும் விளம்பரப் பலகைகள் காட்டுகின்றன.
தேர்தல் நெறிமுறை நடத்தை விதிமீறும் பாஜகவின்மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT