Last Updated : 31 Mar, 2019 07:19 AM

 

Published : 31 Mar 2019 07:19 AM
Last Updated : 31 Mar 2019 07:19 AM

பலாத்கார புகாரில் சிக்கிய பிஷப் ப்ராங்கோ உதவியாளரின் கார்களில் ரூ.9.66 கோடி பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் போலீஸார் நடத்திய சோதனையில், 3 கார்களில் ரூ.10 கோடியைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜலந்தர் சர்ச் பாதிரியார் உட்பட 6 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ளது கன்னா நகரம். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னா பகுதியில் 3 கார்களில் ரூ.9 கோடியே 66 லட்சத்து 61,700-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கன்னா நகர சிறப்பு போலீஸ் கண்காணிப்பாளர் துருவ் தஹியா கூறியதாவது:

ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை கன்னா பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டொராஹா விகில் பகுதியில் 3 கார்கள் வேகமாக சென்றன. அந்தக் கார்களை மடக்கி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது கார்களில் கிட்டத்தட்ட ரூ.10 கோடி இருந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

காரில் பயணம் செய்த 6 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் லூதியானாவில் இருந்து அம்பாலாவுக்கு செல்வதாகக் கூறினர். பணத்தையும் பிடிபட்டவர்களையும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளோம். பிடிபட்ட 6 பேரில் ஜலந்தர் மாவட்டம் பார்த்தாபுரா கிராமத்தில் உள்ள சர்ச் பாதிரியார் ஆண்டனியும் ஒருவர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு நடந்த சோதனைகளில், கணக்கில் வராத பணம் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

இவ்வாறு எஸ்எஸ்பி துருவ் கூறினார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராங்கோவின் நெருங்கிய உதவியாளர்தான் பாதிரியார் ஆண்டனி என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x