Last Updated : 13 Mar, 2019 10:29 AM

 

Published : 13 Mar 2019 10:29 AM
Last Updated : 13 Mar 2019 10:29 AM

24 மணிநேரத்தில் கர்நாடகத்தில் ஆட்சி அமைப்போம்: எடியூரப்பா மீண்டும் சர்ச்சைப் பேச்சு

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக 22 இடங்களை வென்றுவிட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 28 இடங்களில் 16 இடங்களில் வென்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வந்த போதிலும் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை

இதனால், முதல்வர் பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜினாமா செய்தார். காங்கிரஸ் ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பங்கேற்றார். அதில் அவர் பேசுகையில், "நான் பாஜக தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மக்கள் நமக்கு 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகளை வழங்கினால், அடுத்த 24 மணிநேரத்தில் நாம் கர்நாடகத்தில் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் கட்சியில் உள்ள 20 எம்எல்ஏக்கள் குமாரசாமியை முதல்வராக ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் அதிருப்தியுடன் உள்ளார்கள் " எனத் தெரிவித்தார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எடியூரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதற்கு முன், கடந்த மாதம் புல்வாமா தாக்குதல் குறித்தும், பாலகோட் தாக்குதல் குறித்தும் எடியூரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

அப்போது, அவர் பேசுகையில், "பாகிஸ்தானுக்கு எதிராக நாம் பாலகோட்டில் விமானத் தாக்குதல் நடத்திய பின் நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அலை பெருகியுள்ளது. இதனால், 22 இடங்களை நாம் கர்நாடகத்தில் வென்றுவிடலாம்" எனத் தெரிவித்தார்.

இந்தப் பேச்சு சர்ச்சையாகி எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தான் அவ்வாறு பேசவில்லை, தன்னுடைய பேச்சு திரிக்கப்பட்டுவிட்டது என்று எடியூரப்பா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x