Published : 29 Mar 2019 06:09 PM
Last Updated : 29 Mar 2019 06:09 PM

ஒப்புகைச் சீட்டு நடைமுறை: தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்- உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவிப்பு

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 50% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடைமுறைகளை அமல்படுத்தினால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (29-3-19) அன்று தாக்கல் செய்த 50 பக்க பிரமாணப்பத்திரத்தில், “ஒவ்வொரு லோக்சபா தொகுதி அல்லது சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் நடவடிக்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை 6 நாட்கள் கூடுதலாக்கும்” என்று உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

 

தற்போது நம்பிக்கை அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்-ஒப்புகைச் சீட்டு  துல்லியத்தன்மை 99.9936% உள்ளது. ஆகவே இதில் கூடுதலாக ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கும் படலத்தை சேர்த்தால்  ‘நம்பிக்கை மட்டம் அதற்கேற்றார்போல் பெரிய அளவில் அதிகரித்து விடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாதிரி ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடவடிக்கையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  மட்டுமே செய்ய முடியும் என்பதால் அதற்கு அறிவியல் பூர்வமான தர்க்கமோ, புள்ளிவிவர அடிப்படையோ இல்லை.  இன்னும் சொல்லப்போனால் ஒரு விரயமான செயலே என்று கூறப்பட்டுள்ளது.

 

வரும் தேர்தலுக்கு சாம்பிள் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் தன் வலுவான ஆதரவை முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்துள்ளது.

 

அதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரேயொரு வாக்குச்சாவடியிலோ, நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அசெம்ப்ளி செக்மண்ட்டிலும் ஒரு வாக்குச்சாவடியில்  ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு செய்யலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது, தற்போது அந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு எதிராகத்தான் தேர்தல் ஆணையம் இந்தப் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

 

இந்தியப் புள்ளியியல் துறை தனது மார்ச் 22, 2019 அறிக்கையில், மொத்தம் 10.35 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் 479 ஈவிஎம் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை மாதிரி சரிபார்ப்பு செய்தாலே அதன் நம்பிக்கை உருவாக்க சதவீதம் 99.9936% இருக்கும் என்று  தெரிவித்திருந்ததைத்தான் தங்களுக்குச் சாதகமாக தற்போது தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வாதமாக வைத்துள்ளது. ஆனால் உதவி தேர்தல் ஆணையர் சுதிப் ஜெயின், வரும் ஏப்ரல் -மே லோக்சபா தேர்தல்களில் 4125 ஈவிஎம் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படும் என்று கூறியிருக்கிறார்.  “இதுவே இந்தியப் புள்ளியியல் துறை அறிக்கையில் கூறிய அளவை விட 8.6 மடங்கு அதிகமாகும்” என்கிறார் சுதிப் ஜெயின்.

 

‘விரிவான பயிற்சி தேவை’

 

தேர்தல் ஆணையத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், மற்றும் அமித் சர்மா இதுவரை 1,500 வாக்குச்சாவடிகளில் நடத்திய சோதனை ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடவடிக்கையில் பொருத்தமின்மை எதுவும் வந்து விடவில்லை என்றும் சரியாகவே வாக்குப்பதிவும் ஒப்புகைச் சீட்டும் பொருந்திப் போகிறது என்றும் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளனர்.

 

ஆகவே ஒப்புகைச் சீட்டை அதிகரிப்பதென்பது தேர்தல் அதிகாரிகளுக்கு அதிக பயிற்சியைக் கோருவதாகும்.  மேலும் தங்களது வடிவமைப்பு மிகவும் பாதுகாப்புடையது என்றும், ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு என்பது இதற்காகவே ஏற்படுத்தப்படும் சிறப்பு எண்ணிக்கை பூத்களில் கடும் கண்காணிப்புடன் பார்வையாளர் ஒருவர் முன்னிலையிலும் நடைபெறும்.

 

ஆகவே லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே 1.06 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடவடைக்கைகள் 500 முடல் 1200 வாக்குகள் வரை சரிபார்க்கப்படும் என்கிறது தேர்தல் ஆணையம்.

 

இந்த தேர்தலுக்கு முந்தைய சரிபார்ப்பு நடவடிக்கைகள், “அரசியல் கட்சிகளின் / வேட்பாளர்களின்  பிரதிநிதிகள் முன்னிலையில் முற்று முழுதான வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படுகிறது” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x