Published : 19 Mar 2019 06:17 PM
Last Updated : 19 Mar 2019 06:17 PM
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்க விடுத்துள்ளது.
லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் சில தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதால், வதேராவுக்கு பிரதிபலனாக சொத்துக்கள் வாங்கி தரப்பட்டதாக பாஜக புகார் கூறி வருகிறது.
இந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டெல்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். அதன் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டன.
இந்தநிலையில் அவரது ஜாமீன் மனு தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வதோராவை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால் அவருக்கு மார்ச் 25-ம் தேதி வரை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT