Published : 02 Mar 2019 01:56 PM
Last Updated : 02 Mar 2019 01:56 PM
2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாமல் இருக்கும் பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களை இப்போது சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் துணிவிருக்கிறதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் மும்பை, புறநகரான துலே ஆகிய பகுதிகளில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், இதுவரை எந்த பத்திரிகையாளர் சந்திப்பையாவது நடத்தி இருக்கிறாரா? நான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன், பேசுகிறேன்.
ஊழல் குறித்து துணிச்சலாக என்னால் விவாதிக்க முடியும். காவல்காரர் (பிரதமர் மோடி) கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இருக்கிறாரா? பிரதமர் மோடி திருடர் மட்டுமல்ல, கோழையும் கூட.
எப்போது மோடி பேசினாலும் பொய் மட்டுமே பேசுகிறார். உங்களுக்கு உண்மையைக் கேட்க வேண்டுமென்றால், இங்கே வாருங்கள். பொய்களைக் கேட்கவேண்டுமென்றால், நரேந்திர மோடியின் கூட்டங்களுக்குச் செல்லுங்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்த நடவடிக்கை. உங்கள் பணத்தைக் கேட்டு வங்கியில் வரிசையில் காத்திருந்தீர்கள். எந்த பணக்காரராவது, தொழிலதிபர்களான நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்றோர் வங்கி வாசலில் காத்திருந்தார்களா? இவர்கள் தங்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி சொகுசாக வாழ்கிறார்கள்.
புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலில் நமது 40 வீரர்கள் கொல்லப்பட்ட பின் நாம் தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகிறோம். போர் ஏற்படுவது போன்ற சூழல் நிலவியது. அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், அரசை விமர்சிக்கக்கூடாது. ஒற்றுமையாக தேசத்தைக் காக்க வேண்டும் என்று கட்டளையிட்டேன்.
தேசத்துக்கான பிரச்சினை ஓய்ந்த பின் அரசியல் குறித்துப் பேசலாம் என்று எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கிறோம். ஆனால், பிரதமர் மோடி 5 நிமிடங்கள் கூட தனது மக்கள் தொடர்பு பணியைச் செய்யாமல் இருக்க முடியவில்லை. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்தே பேசி வந்தார்.
2014-ம் ஆண்டு தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. 24 மணிநேரத்தில் 450 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார், ஆனால், சீனாவில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டும் சீனாவைத் தோற்கடிக்க முடியும்.
விவசாயிகள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், 15 முதல் 25 முக்கிய தொழிலதிபர்களுக்கு ரூ.3.50 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்துள்ளது''.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT