Last Updated : 02 Feb, 2019 12:31 PM

 

Published : 02 Feb 2019 12:31 PM
Last Updated : 02 Feb 2019 12:31 PM

எல்கர் பரிசத் வழக்கில் சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது: மும்பை போலீஸார் நடவடிக்கை

எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டி சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவை மும்பை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புனேயில் உள்ள ஷானிவார்வாடா பகுதியில் எல்கர் பரிசத் மாநாடு நடந்தது. மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்த அந்த மாநாட்டில் பங்கேற்ற ஏராளமான சமூகச் செயற்பாட்டாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துகளால்தான் மறுநாள் பீமாகோரிகான் பகுதியில் கலவரம் நடந்தது என்று போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பீமாகோரிகான் கலவரம் வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சமூகச் செயற்பாட்டாளர்கள் அருண் பெரேரியா, வெர்னன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், வி.வரவரா ராவ், கவுதம் நவ்லகா ஆகியோர் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே மீது புனே போலீஸார் சந்தேகித்தனர்.

கோவாவில் உள்ள கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெட்டில் பேராசிரியராக ஆனந்த் டெல்டும்டே பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இன்று அதிகாலை டெல்டும்டேவைக் கைது செய்தனர்.

கேரளாவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு வந்திறங்கிய ஆனந்த் டெல்டும்டேவை மும்பை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை புனே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து புனே நகர போலீஸ் இணை ஆணையர் சிவாஜி போக்தே கூறுகையில், " மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட டெல்டும்டே, புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் " எனத் தெரிவித்தார்.

எல்கர் பரிசத் வழக்கை விசாரித்து வரும் துணை போலீஸ் ஆணையர் சிவாஜி பவார் கூறுகையில் "புனே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி டெல்டும்டே தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவரைக் கைது செய்தோம்" எனத் தெரிவித்தார்.

எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்டுகளுடன் டெல்டும்டேவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை புனே போலீஸார் நீதிபதியிடம் அளித்துள்ளனர். இதையடுத்து, டெல்டும்டேவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்டும்டேவின் வழக்கறிஞர் ரோஹன் நஹர் கூறுகையில், " உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பிப்ரவரி 11-ம் தேதிவரை டெல்டும்டேவை போலீஸார் கைது செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அளித்துள்ளது. ஆனால், அதையும்மீறி போலீஸார் கைது செய்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும். இந்த நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x