Published : 12 Feb 2019 08:23 AM
Last Updated : 12 Feb 2019 08:23 AM

கொல்கத்தா காவல் ஆணையரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.

சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுமார் 17 லட்சம் பேரிடம் ரூ.10,000 கோடி வரை சாரதா குழுமம் மோசடி செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாரதா சிட்பண்ட் வழக்கில் முக்கிய ஆவணங்களை தற்போதைய கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க அவர் மறுப்பதாகவும் சிபிஐ புகார் கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தர வின்படி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 9-ம் தேதி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜரானார். முதல் நாளில் அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மூன்றாவது நாளாக ராஜீவ் குமாரிடம் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மேற் பார்வையில் நடைபெற வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கூறியபோது, “சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு களுக்காக மேற்பார்வை குழுவை அமைக்க முடியாது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x