Last Updated : 16 Feb, 2019 11:41 AM

 

Published : 16 Feb 2019 11:41 AM
Last Updated : 16 Feb 2019 11:41 AM

புல்வாமா தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை: அப்போலோ நிர்வாகம்

தீவிரவாதத் தாக்குதலில் காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அப்போலோ சார்பில் இலவசமாக சிகிச்சை அளிக்க விரும்புவதாக மருத்துவமனை நிறுவனர் பிரதாப் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை மாலை துணை ராணுவப் படையினர் 2,500 பேர் 90-க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தீவிரவாதத் தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தைரியமான மகன்களைப் பெற்று, தாய்நாட்டுக்குத் தந்த வீரர்களின் குடும்பங்களுக்குத் தலை வணங்குகிறேன்.

தாக்குதலில் காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அப்போலோ சார்பில் இலவசமாக சிகிச்சை அளிக்க விரும்புகிறோம். வீரர்கள் முழுமையாகக் குணமடையும் வரை நாடு முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனையின் எதாவது ஒரு கிளையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x