Last Updated : 11 Feb, 2019 10:17 AM

 

Published : 11 Feb 2019 10:17 AM
Last Updated : 11 Feb 2019 10:17 AM

சாதியைப் பற்றி பேசுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்: நிதின் கட்கரி ஆவேசம்

சாதியைப் பற்றி பேசுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிம்ப்ரி சின்ச்வாட் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "எங்களுக்கு சாதியின் மீது நம்பிக்கை இல்லை. உங்கள் ஊரில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் என்னிடம் சாதி பற்றி பேசுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

சாதியின் அடிப்படையில் பாகுபாடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தை சாதி, மதவாதமற்ற சமூகமாக உருவாக்க வேண்டும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடும், உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பிரிவினைவாதமும் சமூகத்தில் இருக்கக்கூடாது.

ஏழைகளுக்கு தாராளமாக உதவுங்கள். ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் தர வேண்டும். ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்கு சேவை செய்வதற்குச் சமம்" எனப் பேசினார்.

முந்தைய சர்ச்சைப் பேச்சுகள்:

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியதை அடுத்து, புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, "தேர்தல் தோல்விக்கு கட்சித் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும்" என்று பேசினார்.

பின்னர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், "அரசியல் தலைவர்கள் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே மக்களுக்கு தர வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடிவாங்குவார்கள்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில்  நிதின் கட்கரி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது அவர் "பாஜகவுக்கும், நாட்டுக்கும் தங்களை அர்ப்பணிக்க விரும்புவதாக கூறும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை அப்படி கூறிய ஒருவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் என்னென செய்கிறார்கள் எனக் கேட்டேன்.

அதற்கு அவரோ நான் கடை நடத்தி வந்தேன். நஷ்டம் ஏற்பட்டதால் அதை மூடி விட்டேன். எனது மனைவி வீட்டில் இருக்கிறார், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார்.

நான் அவரிடம் முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள் என வலியுறுத்தினேன்.காரணம், வீட்டை சரிவர நிர்வகிக்க முடியாதவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது.முதலில் உங்கள் குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழையுங்கள் எனக் கூறிவிட்டேன்" என்றார்.

கவனிக்க வேண்டிய காங்கிரஸின் பாராட்டு:

இப்படியாக தொடர்ந்து கட்கரி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிவர இவை அனைத்தும் பிரதமர் மோடியை மனதில் வைத்தே பேசப்படுவதாக காங்கிரஸ் தரப்பு கூறிவருகிறது.

ஏற்கெனவே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு கட்கரி முன்னிறுத்தப்படலாம் என்று சலசலக்கப்படும் நிலையில் அவரது இந்தப் பேச்சு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

கட்கரியின் பேச்சுக்கு வாழ்த்து சொன்ன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "கட்கரிஜி வாழ்த்துகள். பாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் நீங்கள் மட்டும்தான். ரஃபேல் ஊழல் மற்றும் அனில் அம்பானி விவகாரம், விவசாயிகளின் துயரம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் சீரழிவு ஆகியவை குறித்தும் நீங்கள் பேசவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், உங்கள் நற்சான்றிதழ் எனக்குத் தேவையில்லை என்று கட்கரி புறந்தள்ளினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x