Published : 23 Feb 2019 04:13 PM
Last Updated : 23 Feb 2019 04:13 PM

தேர்தலில் மக்களின் வரிப் பணத்தைவிட, சொந்த பணத்தை செலவிடுங்கள்: அரசியல் கட்சிகளுக்கு கம்பீர் வேண்டுகோள்

தேர்தலில் அரசியல் கட்சிகள் மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்வதைக் காட்டிலும், தங்கள் சொந்தப் பணத்தை எடுத்து தேர்தலில் செலவிடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியி சார்பில் இன்று ஆம்ஆத்மி கட்சிக்கு நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. நாளேடுகளில் விளம்பரத்தை தனது ட்விட்ரில் புகைப்படமாக வெளியிட்டு கவுதம் கம்பீர் காட்டமாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்றைய செய்தித்தாள்களைப் பார்க்கும் போது ஆம்ஆத்மி கட்சியின் விளம்பரங்கள்தான் எங்கும் இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் குறித்த விளம்பரங்களாக இருக்கின்றன. வரி செலுத்துபவர்களின் பணம் அக்கறையின்றி செலவு செய்யப்படுகிறதா?. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள், அல்லது முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாரேனும் ஒருவர் விளக்கம் அளிக்க முடியுமா. தேர்தலில் போட்டியிடக்கூட முதல்வருக்கு பணம் இல்லை என்று நினைத்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு ட்விட்டில் கம்பீர் கூறுகையில், " பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட தங்களின் தேர்தல் விளம்பரச் செலவுகளை, வழிசெலுத்துவோரின் பணத்தில் இருந்து செலவு செய்வதைவிட,  தங்களின் சொந்த பணத்தில் இருந்து செலவழிக்க வேண்டும். வரிசெலுத்துவோரின்  பணம் வளர்ச்சிக்காகவும், சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x