Published : 21 Feb 2019 05:41 PM
Last Updated : 21 Feb 2019 05:41 PM
2019 மக்களவைத் தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி மேற்கொள்வதை அகிலேஷ் யாதவ்வின் தந்தையும் சமாஜ்வாதிக் கட்சியின் மூத்தத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் விரும்பவில்லை.
சமாஜ்வாதி தலைமைச்செயலகத்தில் இன்று லக்னோவில் அவர் தொண்டர்களிடம் உரையாற்றிய போது, வரும் லோக்சபா தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தில் பாதிக்குப் பாதி என்று சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜனுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வதில் தனக்கு மகிழ்ச்சியில்லை என்பதை நேரடியாகவே தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் தேர்தல் தயாரிப்புகள் நன்றாக உள்ளதாகவும் முலாயம் கூறியதாக கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பாக முலாயம்சிங் யாதவ், ‘பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்’ என்று தான் விரும்புவதாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், இப்போது பகுஜனுடன் கூட்டணியில் அதிருப்தி மற்றும் பாஜக தயாரிப்புகள் நன்று என்றும் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகள் முறையே 37 மற்றும் 38 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு செய்து கொண்டன.
“பாதிக்குப்பாதி விட்டுக்கொடுப்பதன் அடிப்படை என்ன? நம் கட்சி வலுவானது. நாமும் வலுவாகவே இருக்கிறோம், ஆனால் நம் கட்சியினரே நம்மை பலவீனமாக்குகின்றனர். என்னமாதிரியான ஒரு வலுவான கட்சியாக சமைத்தோம்... நான் முதல்வரானேன், பாதுகாப்பு அமைச்சரானேன்” என்று முலாயம் சிங் யாதவ் தன் கீழ் இருந்த போது கட்சி எப்படி வலுவாக இருந்தது என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார்.
மேலும் தொண்டர்களிடம் கேட்கும் போது, ‘தேர்தலில் போட்டியிட என்னிடம் டிக்கெட் கேளுங்கள்.. உங்களில் எவ்வளவு பேர் டிக்கெட் கேட்டீர்கள்? ஒருவரும் இல்லை.. பிறகு எப்படி நீங்கள் போட்டியிட முடியும்? அகிலேஷிடம் கேட்டுப் பெறுவீர்கள் ஆனால் அதை நான் மாற்றிவிடுவேன்’ என்று பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT