Published : 13 Feb 2019 12:45 PM
Last Updated : 13 Feb 2019 12:45 PM
'அழும்' பாம்பு என்று அழைக்கப்படும் புதியவகைப் பாம்பு அருணாச்சலப் பிரதேசத்தின் லேபா-ராடா மாவட்டத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்தப் பாம்பு விஷமற்ற கீல்பேக் வகையைச் (ஆபத்தை விளைவிக்காத நீர்நிலைகளின் அருகே பெரும்பாலும் தவளைகளை உண்டு வாழும் பாம்பு வகை) சேர்ந்தவை. ஹெபியஸ் லேக்ரிமா என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படும் இப்பாம்பின் கண்டுபிடிப்பு குறித்து நியூஸிலாந்தைச் சேர்ந்த விலங்கின அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
இதன் பெயர்க்காரணம் குறித்து குவாஹத்தியைச் சேர்ந்த விலங்கியலாளரும் பாம்பைக் கண்டுபிடித்தவருமான ஜெயதித்யா புர்காயஸ்தா கூறும்போது, ''இந்த வகைப் பாம்பின் கருவிழிகளின் கீழ் கருப்பு நிறத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டு விழுவது போல உள்ளது. அதுன் ஊடாக வெள்ளைக் கோடுகள் மேல் தாடையில் இருந்து தலைக்குப் பின்புறம் விரிந்துசெல்கின்றன.
இதனால் இதற்கு 'அழும்' பாம்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லேக்ரிமா என்றால் லத்தீன் மொழியில் கண்ணீர் என்று அர்த்தம்.
48.7 செ.மீ. நீளம் கொண்ட இந்தப் பாம்பை, பாசர் நகரத்தை ஒட்டிய வயல்வெளிகளில் இருந்து கண்டுபிடித்தேன். இதை ஹெபியஸ் பிரிவில் உள்ள 44 வகைப் பாம்புகளோடு ஒப்பிட்டோம். ஆனால் மற்றவகைப் பாம்புகளில் இருந்து இந்த அழும் பாம்பு பல்வேறு வகைகளில் மாறுபட்டிருந்தது.
குறிப்பிடத்தக்க வகையிலான தடிமன், நீளம், உடல் முழுவதும் குறுக்காக ஓடும் கோடுகள், ஒழுங்கற்ற அடர் தழும்புகள் ஆகியவை மற்ற பாம்புகளில் இருந்து இதை வேறுபடுத்தின. சிறீய மீன்கள், தலைப்பிரட்டைகள், தவளைகளை உட்கொண்டு இவை வாழ்கின்றன'' என்று தெரிவித்தார் ஜெயதித்யா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT