Published : 14 Feb 2019 12:11 PM
Last Updated : 14 Feb 2019 12:11 PM
ராய்ச்சூர் மாவட்ட காவல்துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் மஜத எம்எல்ஏ நாகன கவுடாவின் மகன் சரணகவுடாவிடம் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை முதல்வர் குமாரசாமி அண்மையில் வெளியிட்டார். கடந்த பிப்.8-ம் தேதி பேசப்பட்ட உரையாடல் அடங்கிய ஆடியோவைப் பதிவுசெய்த சரணகவுடா, புதன்கிழமையன்று புகார் அளித்தார்.
இந்நிலையில் ராய்ச்சூர் மாவட்ட காவல்துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
எடியூரப்பா தவிர்த்து தேவதுர்கா பாஜக எம்எல்ஏ சிவ நாகவுடா நாயக், ஹஸ்ஸன் பாஜக எம்எல்ஏ ப்ரீத்தம் கவுடா மற்றும் முன்னாள் பத்திரிகையாளரும் எடியூரப்பாவின் ஆலோசகருமான மரம்கல் ஆகியோர் மீதும் தேவதுர்கா காவல்துறை சார்பில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவுக்குத் தாவவில்லை என்றால் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடுவேன் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் சரணகவுடா புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 120 பி கீழும் (குற்றவியல் சதி) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் சரணகவுடாவைச் சந்தித்ததே இல்லை என்று மறுத்த எடியூரப்பா, பின்பு அவரைச் சந்தித்ததாக ஒப்புக்கொண்டார்.
முதல்வர் குமாரசாமியின் உத்தரவின்பேரில், எப்ஐஆர் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜகவினர், நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT