Published : 09 Feb 2019 12:48 PM
Last Updated : 09 Feb 2019 12:48 PM

இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தானில் மீண்டும் குஜ்ஜார் போராட்டம்: ரயில்கள் ரத்து

ராஜஸ்தானில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தினர். கடுமையான போராட்டத்தால் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில வாக்குறுதி அளித்தது. 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.  

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, மீண்டும் ரயில்  மறியல் போராட்டத்தை குஜ்ஜார் மக்கள் தொடங்கி உள்ளனர்.

இதனால், டெல்லி- மும்பை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இன்று காலை முதல் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. ஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x