Last Updated : 02 Feb, 2019 03:10 PM

 

Published : 02 Feb 2019 03:10 PM
Last Updated : 02 Feb 2019 03:10 PM

பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது: மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாஜகவுக்கு ஆதரவு கிடைத்துவிடும் என்று அச்சப்பட்டு மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப்படுகிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி மறைமுகமாகக் குற்றச்சாட்டு சுமத்தினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி இரு கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார். முதலில் 24 பர்கானாவில் உள்ள தாக்கூர் நகரிலும், 2-வதாக துர்காபூரிலும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார்.

தாக்கூர் நகரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மோடியைப் பார்த்ததும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் முழக்கமிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.   மாநிலத்தில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துவிடும் என அச்சப்பட்டு, பாஜக தொண்டர்களுக்கு எதிராக சிலர்(மம்தா பானர்ஜி)  இதை செய்கிறார்கள்.

வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்குவதன் மூலம் எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகள், விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா என்பது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மக்கள் மதரீதியான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குள் வருவோருக்குக் குடியுரிமை வழங்கும் மசோதாவாகும். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் புறக்கணிக்காதீர்கள், ஆதரியுங்கள் என்று மேற்கு வங்க எம்.பி.க்களுக்கும், முதல்வருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்து மக்கள் ஆகியோரின் நலனுக்காக வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசம் விடுதலைப் பெற்றதில் இருந்த இந்தப் பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுவந்தனர்.

பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்த திட்டங்கள் மூலம், 12 சிறு விவசாயிகள், 40 கோடி தொழிலாளர்கள், 3 கோடி நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். இந்த பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான தொடக்கம்தான். தேர்தலுக்குப் பின் நாங்கள் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உயர்த்துவதாக அமையும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தாக்கூர் நகர் பொதுக்கூட்டத்தில் 14 நிமிடங்கள் மட்டுமே பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துர்காநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x