Published : 25 Feb 2019 06:02 PM
Last Updated : 25 Feb 2019 06:02 PM

காஷ்மீர்: கல்லெறிபவர்கள் சுதந்திரமாக விடப்படுகின்றனர், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ஆயுதப்படையினர் மீது வழக்கா? - உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய மனு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படையினர், போலீஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்துபவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது ஆனால் தற்காப்பு உத்தியைக் கையாளும் ஆயுதப்படையினர் மீது வழக்கு தொடர்வதா என்ற கேள்வி எழுப்பிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

காஜல் மிஷ்ரா (20), பிரீத்தீ கேதார் கோகலே (19) ஆகிய இருவர் தங்கள் மனுவில் ஆயுதப்படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்துபவர்கள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பாதுகாப்பு பெறுகின்றனர், ஆனால் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதப்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கிரிமினல் குற்றம் பதிவு செய்யப்படுகிறது. அதாவது கல்வீச்சுத் தாக்குதலை வன்முறையாளர்கள் நடத்தினால் ராணுவ வீரர்கள் தங்கள் தோள்களை குலுக்கிவிட்டு பேசாமல் போக வேண்டுமா? என்று தங்கள் மனுவில் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

“ராணுவ வீரர்கள் எதிர்நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது வழக்கு, ஆனால் கல்லெறிபவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை” இதுதான் அங்கு நிலைமை என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமை அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.  இதில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மீனாட்சி அரோரா மற்றும் நீலா கோகலே ஆகியோராவார். இந்த மனு மீது மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகம், தேசிய மனித உரிமை ஆணையம், ஜம்மு காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

 

தங்கள் வாதங்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய காஷ்மீர் முதல்வர் கல்வீச்சுத் தாக்குதல் வன்முறையாளர்கள் மீதான 9,760 வழக்குகள் வாபஸ் பெற்றதாகக் கூறியதை எடுத்துக் காட்டினர். அதாவது இவர்கள் முதல் முறையாக கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் கருணையுடன் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் வாபஸ் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மனுதாரர்கள், சட்டத்தின் நடைமுறைகளை சந்திக்காமல் வழக்கை மாநில அரசு எப்படி திரும்பப் பெற முடியும் என்ற சங்கடமான கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

 

ஷோபியான், புல்வாமா மாவட்டங்களில் ஆயுதப்படையினர் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது நிகழ்ந்த சம்பவங்களை இந்த மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாதபடி செய்யும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளாதபடி தடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த மனுவில் 2018-ல் மட்டும் காஷ்மீரில் 759 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றும் ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் கூறியதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x