Published : 25 Oct 2018 09:30 AM
Last Updated : 25 Oct 2018 09:30 AM
மாநிலங்களவையில் 2-வது முறையாக உறுப்பினராக இருக்கும் கனிமொழி, அதன் திமுக அவைத் தலைவராக உள்ளார். இவர், மகளிர் பிரச்சினை உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை அவ்வப்போது மாநிலங்களவையில் எழுப்பி மத்திய அரசிடம் பதில்களையும் பெறுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.இவரது பதவிக்காலம் அடுத்தஆண்டு ஜூலை 24-ல் நிறைவு பெறுகிறது. அடுத்து மீண்டும் மாநிலங்களவைக்கு அவர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும், தமது நீண்ட கால விருப்பமான மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட்டு எம்பியாக கனிமொழி விரும்புகிறார்.
மக்களால் வாக்களிக்கப்பட்டு நேரடியாக மக்களவையில் எம்பியாக வருபவர்களின் செயல்பாடுகளால் அதிக முக்கியத்துவம்கிடைக்கிறது. இதற்கு மாநிலங்களவையை விட, மக்களவையில் அதிக உறுப்பினர்களும் முக்கியத் தலைவர்களும் இருப்பது காரணம். இதனால், மாநிலங்களவையில் முக்கியத்துவம் பெற்றுவிட்ட கனிமொழி, மக்களவையிலும் அதைப் பெற விரும்புவதாகக் கருதப்படுகிறது. எனவே, அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி திமுக சார்பில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என திமுகவினர் இடையே அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு ஏற்றவாறு அடுத்த ஆண்டு மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடியவுள்ள கனிமொழி, ஜூலை 24-ம்தேதிக்குள் மீண்டும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.
இதனால், அதற்கு 2 மாதங்கள் முன்பாக நிகழவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனிடையில், கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்காக போட்டியிட இருப்பதாக நேற்று செய்திகளும் வெளியாயின.இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளிதழிடம் கனிமொழி கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் மீது கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், கட்சித் தலைமைவாய்ப்பளித்தால் நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளேன்” என்றார்.எழுத்தாளர், பத்திரிகையாளர் என இருந்து கொண்டு திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருந்தவர் கனிமொழி. அப்போது,திமுகவில் உருவான சூழல் காரணமாக கட்சிக்காக டெல்லியில் ஒரு நம்பிக்கையான புதியதலைவரை அமர்த்த திமுக தலைமை விரும்பியது. அதற்கேற்றவாறு 2007-ல் மாநிலங்களவைக்கான தமிழக உறுப்பினர்கள் தேர்தல் வந்தது.
இதில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது மகள்கனிமொழியை திடீர் என மாநிலங்களவை உறுப்பினராக்கினார்.இதையடுத்து கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவராகும் வாய்ப்பு கனிமொழிக்கு கிடைத்தது. பிறகு திமுகவின் மகளிரணி செயலாளராகவும் கட்சியில் உயர்ந்த கனிமொழிக்கு திமுகவில் முக்கியத்துவம் அதிகரித்தது. இதனால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கனிமொழி போட்டியிட விரும்பியதாகவும், அவர் 2ஜி அலைக்கறை வழக்கில் சிக்கியதால் அது முடியாமல் போனதாகவும் கருதப்படுகிறது.தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து மகளிரணி ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வரும் கனிமொழிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு திமுகவினர் கூறி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT