Last Updated : 19 Jan, 2019 09:30 AM

 

Published : 19 Jan 2019 09:30 AM
Last Updated : 19 Jan 2019 09:30 AM

மக்களவை தேர்தலில் வெற்றி பெற மாநிலங்களவை பாஜக உறுப்பினர்களுக்கு அதிக பொறுப்பு

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் மாநிலங்களவையின் பாஜக உறுப்பினர்களுக்கு அதிக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்த பட்டியலில் ஐந்து மத்திய அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் 25 மாநிலங்களின் தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை எம்.பி.க்கள் தங்கள்தொகுதிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டி அவர்களுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படவில்லை. இவர்களில், போட்டியிட மறுவாய்ப்பு கிடைக்காதவர்களும் தமது தொகுதியின் புதிய வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்ற அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஜே.பி. நட்டா, முக்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட 3 மாநிலங்களவை எம்.பி.க்களும் நட்டாவிற்கு உதவியாக அமர்த்தப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் பொறுப்பு மனித வளத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரான தாவர்சந்த் கெலாட்டுக்கு உத்தராகண்ட் மாநிலப் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன. ரயில் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பொறுப்பை ஏற்றுள்ளார். டெல்லியின் பொறுப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

மாநிலங்களவையின் பாஜக எம்பிக்களில் பூபேந்தரா யாதவிற்கு பிஹாரும், அனில் ஜெயினுக்கு சத்தீஸ்களின் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பொறுப்பு ஓ.பி.மாத்தூரிடமும், ஆந்திராவின் பொறுப்பு வி.முரளிதரனிடமும் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்களின் ஒருவரான முரளிதர் ராவிடம் கர்நாடக மாநில பொறுப்பளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மாநிலங்களின் பொறுப்பு பாஜக ஆளும் மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், அதன் எம்எல்ஏக்கள் மற்றும் மாநிலக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் அளித்துள்ளார் அமித்ஷா.

தேர்தலுக்காக எந்த ஒரு மாநிலத்தின் முக்கிய பொறுப்பும் தமிழக பாஜக தலைவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்வதும் காரணமாகக் கருதப்படுகிறது. இக்கட்சியின் தமிழகத்தின் தேசிய தலைவர்களாக எல்.ஆர்.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் சமூக இணையதளப் பிரிவின் இணை அமைப்பாளராக கணேசன் மட்டும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x