Last Updated : 12 Jan, 2019 09:42 AM

 

Published : 12 Jan 2019 09:42 AM
Last Updated : 12 Jan 2019 09:42 AM

விண்வெளிக்கு 3 இந்தியர்கள் பயணம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

விண்வெளிக்கு மனிதரை அனுப் பும் ககன்யான் திட்டம் 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கே.சிவன் கூறியதாவது:

விண்வெளி ஆய்வு தொழில் நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக முன்னேறிவருகிறது. இஸ்ரோ அனுப்பியுள்ள செயற் கைக் கோள்களால் தகவல் தொழில்நுட்பத் துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2008-ல் சந்திரனை ஆய்வு செய்ய சந்திராயன்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப் பட்டது. சந்திரனின் நிலப் பரப்பை ஆய்வுசெய்து அது தகவல்களை அனுப்பியது. இதன் அடுத்தகட்டமாக சந்திராயன் 2 செயற்கைக்கோளை ஏவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. சில முக்கியமான சோதனைகளை செய்து முடிப்பதற்காகவே இந்த தாமதம் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரலில் இதனை ஏவ திட்டமிட்டுள்ளோம். இது இஸ்ரோவின் மிக முக்கிய சாதனையாக அமையும்.

இஸ்ரோ சார்பில் விண் வெளிக்கு முதல்முறையாக மனி தரை அனுப்பும் திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள் ளது. இந்த திட்டம் தொடர்பான ஆய்வுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட பயிற்சி இந்தியாவிலும் பிறகு உயர்நிலை பயிற்சி ரஷ்யாவிலும் அளிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் முதல் ஆளில்லா விண்கலம் 2020 டிசம்பரிலும் இரண்டாவது ஆளில்லா விண் கலம் 2021 ஜூலையிலும் விண்ணில் ஏவப்படும்.

பிறகு 2021 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதரை அனுப் பும் திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தில் விண்ணுக்கு அனுப் பும் மூவரும் இந்தியர்களாக இருப் பார்கள். இதில் பெண் ஒருவரும் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த திட்டத்துக்காக புதிய மையத்தை இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது. ககன் யான் திட்டம் இஸ்ரோவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும்.

கடந்த ஆண்டு இஸ்ரோ 16 செயற்கைக் கோள்களை அனுப்பியது. இந்த ஆண்டு 32 செயற்கைக் கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு கே.சிவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x