Last Updated : 18 Jan, 2019 02:38 PM

 

Published : 18 Jan 2019 02:38 PM
Last Updated : 18 Jan 2019 02:38 PM

ராமர் கோயிலை மட்டும் கட்டுங்கள்; நாட்டுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தேவையான முதல் கிடைக்கும்: ஆர்.எஸ்.எஸ்.

ராமர் கோயிலை மட்டும் கட்டுங்கள். நாட்டுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தேவையான முதல் கிடைக்கும் என மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுரை கூறியுள்ளது.

மேலும், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை கிண்டல் செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் நேற்று (வியாழனன்று) ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் பேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி, "2025-ல் ராமர் கோயிலை கட்டும் பணியைத் தொடங்கும்போது நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்.

1952-ல் சோம்நாத் கோயில் கட்டப்பட்ட பின்னரே தேசத்தின் வளர்ச்சி அதிகரித்தது. இப்போது ராமர் கோயிலைக் கட்டினால் அதே வேகத்தில் தேசம் வளர்ச்சி காணும். ராமர் கோயிலை மட்டும் கட்டுங்கள். நாட்டுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தேவையான முதல் கிடைக்கும்" என்றார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சி ராமர் கோயிலைக் கட்ட போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே ஆர்.எஸ்.எஸ்.,ஸின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

ராமர் கோயிலைக் கட்ட அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமர் கோயில் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பையாஜி ஜோஷி, "ராமர் கோயிலை 2025-க்குள்ளாவது கட்டி முடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இன்றைக்கு பணிகளைத் தொடங்கினால்கூட 2025-ல் முடித்து விடலாம்" என்றார்.

ராமர் கோயில் சர்ச்சை தொடர்பான வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x