Published : 29 Jan 2019 03:14 PM
Last Updated : 29 Jan 2019 03:14 PM
எல்எல்ஏக்கள் என்றாலே பெரும்பாலும் செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவே இருக்கும் நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசையில் வாழும் பாஜக எம்எல்ஏவுக்கு தொகுதி மக்கள் சேர்ந்து புதுவீடு கட்ட உதவியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், சியோபூர் மாவட்டம் விஜய்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ சீதாராம் ஆதிவாசி. வறுமையிலும், கஷ்டத்திலும் வாழ்ந்தாலும் பாஜகவின் தீவிர விஸ்வாசி. இதன் காரணமாக, கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்றார். இதற்கு முன் 2 முறை போட்டியிட்டும் சீதாரம் தோல்வி அடைந்தார்.
வேட்புமனுத் தாக்கலின் போது, தன்னிடம் ரூ.46 ஆயிரத்து 733 மட்டும் கைவசம் இருக்கிறது. இதில் ரூ.25 ஆயிரம் ரொக்கமும், மீதத்தொகை வங்கியில் இருக்கிறது. சொந்தமாக 600 சதுர அடியில் மண் குடிசையும், 2 ஏக்கர் நிலமும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தனது மனைவியின் பெயரிலும் சொத்துகள் ஏதும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், வசதியானவருமான ராம்நிவாஸ் ராவத்தை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏவானார் சீதாராம் ஆதிவாசி.
இந்நிலையில் எம்எம்ஏ ஆன பின் சீதாராம் தனது சொந்த கிராமமான பிப்ராணி கிராமத்தில் மண்குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். சீதாராமுக்கு முதல் மாத ஊதியம் விரைவில் ரூ.1.10 லட்சம் வர இருக்கிறது.
மண்குடிசையில் வாழ்ந்துவரும் சீதாராமை வேறு நல்ல வீட்டில் வாழக் கூறி மக்கள் கூறியும் அவர் தன்னிடம் பணம் இல்லை என்பதால், வேறுவீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து தொகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களால் முடிந்த தொகையைச் சேகரித்து எம்எல்ஏ சீதாராம் புதுவீடு கட்ட உதவியுள்ளனர்.
மேலும், தனக்குக் கிடைக்கும் முதல் மாத ஊதியத்தையும் தொகுதிமக்களுக்குச் செலவு செய்வதாக சீதாராம் தெரிவித்த நிலையில், அதை வீடுகட்ட வைத்துக்கொள்ளும்படி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிப்ராணி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் கூறுகையில், "எங்கள் தொகுதியின் எம்எல்ஏ மண்குடிசையில் பரிதாபமாக வாழ்வது எங்களுக்கு அவமானமாக, வெட்கமாக இருக்கிறது. ஆதலால், எங்கள் கிராமம், அருகில் இருக்கும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிதி திரட்டி சீதாராம் புதுவீடு கட்ட நிதி உதவி அளித்துள்ளோம். எங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட போது ஏராளமான உதவிகளை சீதாராம் செய்துள்ளார். அதனால்தான் நாங்கள் அவருக்கு உதவி செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து எம்எல்ஏ சீதாராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "எனக்குச் சொந்தமாக வீடு கட்டுவதற்கு கையில் போதுமான பணம் இல்லை. முதல் மாத ஊதியமும் இன்னும் கைக்கு வரவில்லை. மக்களுக்கு என் முதல் மாத ஊதியத்தைச் செலவிடுவேன் என்றுகூறியபோது அதை மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மக்கள் அனைவரும் சேர்ந்து நான் சொந்தமாக வீடு கட்ட நிதி உதவி செய்துள்ளனர். நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் என் எடைக்கு நிகராக காசுகளை அன்பளிப்பாக அளித்தனர். அந்தப் பணத்தை வைத்து குடிசையில் பராமரிப்புப் பணிகள் செய்தேன் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT