Published : 28 Jan 2019 11:37 AM
Last Updated : 28 Jan 2019 11:37 AM

பாலியல் தொழிலாளி என்று திட்டியதற்காக கணவனை மனைவி கொலை செய்தால் அது கொலையாகாது: உச்ச நீதிமன்றம்

தன்னை பாலியல் தொழிலாளி என்று  ஆத்திரமூட்டும் வகையில் திட்டியததற்காக கணவனை மனைவி கொலை செய்தால் அது கொலையாகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

"இந்திய சமூகத்தில் எந்த ஒரு பெண்ணும் தன்னை பாலியல் தொழிலாளி என்று கணவர் திட்டுவதை விரும்புவதில்லை. இப்படித் திட்டுவதால் அவரது கோப உணர்ச்சிக்கு தூண்டப்படுகிறார். எனவே, இந்த வழக்கில் இதைக் கொலையாக கருதாமல் மரணம் விளைவிக்கும் குற்றமாக நீதிமன்றம் கருதுகிறது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கு விவரம்:

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணையும் அவரது மகள்களையும் பாலியல் தொழிலாளிகள் என ஆத்திரமூட்டும் வகையில் திட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையில் அப்பெண்ணின் நண்பரும், அண்டை வீட்டாரும் தலையிட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நண்பர், அப்பெண்ணின் கணவரைக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். பின்னர் பெண்ணின் உதவியுடன் அவரது கணவரைக் கொலை செய்து சடலத்தை காரில் ஏற்றி வேறு ஒரு இடத்துக்கு கொண்டு சென்று எரித்துக் கொன்றனர்.

இது தொடர்பாக அப்பெண் தனது கிராமத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 40 நாட்களுக்குப் பின்னர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அப்பெண்ணும் அவரது நண்பரும் கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றமும் அவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தியது. இதனை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மோகன் எம்.சந்தனகவுடர், தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம்:

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இந்த வழக்கில் கணவர், சம்பந்தப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலாளி என திட்டி அவரது ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறார். இந்திய சமூகத்தில் எந்த ஒரு பெண்ணும் தன்னை தனது கணவர் பாலியல் தொழிலாளி என்று திட்டுவதை விரும்புவதில்லை. அதுவும் தனது மகள்களை அப்படி அழைப்பதை ஏற்பதில்லை. இந்த குறிப்பிட்ட வழக்கில் கணவர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பெண்ணையும் அவரது மகள்களையும் பாலியல் தொழிலாளி என திட்டியதாலேயே அவர் இத்தகைய சம்பவத்தைச் செய்திருக்கிறார். ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. எனவே இந்த நீதிமன்றம் இதைக் கொலையாக கருதாமல் மரணம் விளைவிக்கும் குற்றமாகக் கருதுகிறது. அதனால், தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிடுகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x