Last Updated : 17 Jan, 2019 11:41 AM

 

Published : 17 Jan 2019 11:41 AM
Last Updated : 17 Jan 2019 11:41 AM

63 நாள் வேண்டாம், ஒரே நாள் போதும்: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் ரீஃபண்ட் : விரைவில் அறிமுகம்

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்து ரீஃபண்டுக்காக இனிமேல் 63 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரிட்டர்ன் தாக்கல் செய்த ஒருநாளில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.

அடுத்த தலைமுறைக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் முறைக்கான மென்பொ ருளை உருவாக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ரூ.4,241.97 கோடி மதிப்பில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்ட இ-பைலிங், சென்ட்ரலைஸ்ட் பிராஸஸிங் சென்டர் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தற்போது வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த பின், அதைப் பரிசீலனை செய்து மீண்டும் அவர்களுக்குப் பணத்தை அளிக்கச் சராசரியாக 63 நாட்கள் ஆகும். இந்நிலையில் இந்த புதிய மென்பொருள் மூலம் அது ஒருநாளில் முடிந்துவிடும். இந்தப் புதிய மென்பொருள் தயாரிக்கும் பணி இன்போசிஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:

''வருமான வரி ரிட்டர்ன் தாக்கலை எளிமைப்படுத்தியும், ரீஃபண்ட் வழங்கும் நாட்களை 63 நாட்களில் இருந்து ஒருநாளாகக் குறைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான மென்பொருளைத் தயாரிக்க ரூ. 4,242 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மென்பொருளை இன்போசிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த 18 மாதங்களில் முடிக்கப்படும் இந்த மென்பொருள் 3 மாத சோதனை முயற்சிக்குப் அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த புதிய திட்டம் வருமான வரி செலுத்துதலை இப்போதுள்ள நிலையைக் காட்டிலும் மேலும் எளிமையாக்கும். ஏதேனும் தவறுகள் நடந்தால் விரைவாகச் சரி செய்யும்.

ஏற்கெனவே இருக்கும் சிபிசி ஐடிஆர்-1.0 திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.1,482 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1.83 லட்சம் கோடி வருமானவரி செலுத்துவோருக்கு ரீஃபண்ட் அளிக்கப்பட்டுள்ளது. ”

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் கணக்கில், முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இருக்கும். அந்தப் படிவத்தில் அவர்களின் பெயர், பான் எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் ஊதியம், வட்டி வருவாய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மட்டும் வரி செலுத்துவோர் குறிப்பிட்டால் போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரிட்டர்ன் பரிசீலனை செய்வதில் அதிகமான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை நிலவும், ரிட்டர்ன்களை விரைவாகப் பரிசீலனை செய்ய முடியும், குறிப்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தலையீடு இல்லாமல் விரைவாக ரிட்டர்ன்கள் பரிசீலிக்க முடியும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x