Published : 11 Dec 2018 12:07 PM
Last Updated : 11 Dec 2018 12:07 PM
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் தீர்ப்பளித்து இருக்கிறார்கள், இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதியோடு முடிந்தது. இந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.
இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், அங்கும் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முடியாத சூழல் நிலவுகிறது. சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 2-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தல்முடிவு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டில், “ மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். இதுதான் மக்களின் தீர்ப்பு. நாட்டு மக்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ஜனநாயகத்தின் வெற்றியாகும். அநீதி, அட்டூழியம், அரசு நிறுவனங்களை அழித்தல், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துதல், ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தலித், எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஓ.பி.சி சிறுபான்மையினர் என யாருக்கும் எந்தவிதமான நல்ல பணிகளையும் செய்யாமல் இருந்தவர்களுக்கு எதிரான வெற்றியாகும்.
மக்களவைத் தேர்தலுக்கு அரையிறுதியாகப் பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் பாஜக இல்லை. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகம் மலரும் என்பதற்கான உண்மையான அறிகுறியாகும். ஜனநாயகத்துக்கு ஆட்டநாயகன் விருதை மக்கள் அளித்துள்ளார்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT